செவ்வாய், 21 ஜூலை, 2009

ஆண்டாள் அருளிய திருப்பாவை


ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தில், ஆழ்வார்கள் உயர்ந்த ஸ்தானத்தை உடையவர்கள். அந்த ஆழ்வார்களின் கூட்டத்தில், பாண்டிய ராஜ சபையில் பர தத்துவம் ஸ்ரீமன் நாராயணனே என்று உலகு உய்ய நிர்ணயம் செய்து, பின் அந்த பரவாசுதேவனான கண்ணனுக்கே தம் அன்பால் கண்ணேறு கழித்த பெரியாழ்வார் மிக உயர்ந்தவர். அப்படிப்பட்ட பெரியாழ்வாரையும் விஞ்சி அந்த பரம்பொருளுக்கே வாழ்க்கைப்பட்ட ஆண்டாள், விஷ்ணு பக்தியின் சிகரமாக விளங்குகிறாள்.

ஆசார்ய வந்தனம்


லக்ஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் |
அச்மதாசார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

யோநித்யமச்சுதபதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யமோஹதஸ்தத் இதராணி த்ருணாய மேனே |
அஸ்மத் குரோ: பகவதோஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் பரபத்யே ||

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய கவிதார்கிக கேசரி |
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதாஹ்ருதி ||

ஆண்டாளின் தோற்றம்

ஸித்தானாம் சரதாம் கலாவபகமே வர்ஷே நளாக்யே ரவெள
யாதே கர்க்கடகம் விதாவுபசிதே ஷஷ்டேஹநி ஸ்ரீமதி |
நக்ஷத்ரேர்யமதைவதே க்ஷிதிபுவோ வாரே சதுர்த்யாம் திதெள
கோதா ப்ராதுரபூதசிந்த்யமஹிமா ஸ்ரீவிஷ்ணு சித்தாத்மஜா ||

கலி பிறந்து தொண்ணூற்றேழு ஆண்டுகளுக்கு பிறகு (கடபயாதி சங்க்யை படி ஸித்த என்ற வார்த்தையை தொண்ணுற்று ஏழு என்று கொள்வர்) ஒரு நள வருஷத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும்போது, சுக்ல பக்ஷ சதுர்த்தியில், ஆடிமாதம் ஆறாம் தேதி செவ்வாய் கிழமையன்று, அர்யமா என்னும் தேவனுக்குரிய பூர நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில், ஸ்ரீவிஷ்ணு சித்தருடைய பெண்ணாக கோதை அவதரித்தாள்!
ஆண்டாள் ஆழ்வார்களைக்காட்டிலும் உயர்ந்தவள் என்று சொல்வார்கள் - ஏனெனில் பக்தியில் ஆழ்வார்களே ஆண்டாளின் வழிமுறையை கைக்கொண்டுதான் பரம்பொருளை அடைந்தார்கள் என்று பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள். ஆண்டாள் பெண்ணானதால் அரங்கனை எளிதாக காதலிக்க முடிந்தது - தன் பக்தியை ப்ரணயமாய், விரகமாய் வெளிப்படுத்த முடிந்தது - இதே வழியைத்தான் ஆழ்வார்களும், நாயகி பாவத்தில் கடைபிடிக்க முயற்சித்தார்கள் - நம்மாழ்வார் பக்தியால் தம்மை பராங்குச நாயகியாக்கிக் கொண்டார் - திருமங்கை மன்னன் தம்மை பரகால நாயகி ஆக்கிக் கொண்டார்.

மேற்சொன்ன கருத்தை ஸ்வாமி தேசிகன் இந்த கோதாஸ்துதி ஸ்லோகத்தில் சொல்கிறார்:

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே!
பக்திம் நிஜாம் ப்ரணய பாவனயா க்ருணந்து ||
உச்சாவசைர்விரஹ ஸங்கமஜைருதந்தை
ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்தவதீயா ||

ஹே கோதாதேவி! உன்னுடைய ப்ரியதமனான-காதலனான கண்ணனிடம் பக்தியை ப்ரணய பாவனையாக - காதலாக வெளிப்படுத்தினாய். பிரிந்தால் விரஹமாகவும், பிணைந்தால் இன்பமாகவும் பல்வேறு பாவனைகளை வெளிப்படுத்தி நீ செய்த பக்தியைப்போல் உயர்ந்தது வேறில்லாமையால், ஆண்களான ஆழ்வார் ஆசார்யர்களும் தம்மை பெண்ணாகக்கருதி உன் வழிமுறையையே கைக்கொண்டார்கள்”. இதிலிருந்து பரம்பொருளை காதல் செய்து அவனையே மணந்த ஆண்டாளின் வழிமுறையே சிறந்தது என்பது கருத்து.

ஆண்டாள் அருளிய திருப்பாவை

அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு (ப்)
பன்னு திருப்பாவை(ப்) பல்பதியம்
இன்னிசையால் பாடிகொடுதாள் நற்பாமாலை
பூமாலை சூடி(க்) கொடுத்தாளை(ச்) சொல்லு

சூடி(க்) கொடுத்த சுடர்(க்) கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

பாசுரம்-1.மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழைஈர்
சீர்மல்கும் ஆய்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
எரார்ந்த கன்னி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழ்(ப்) படிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்-2.வையத்து வழ்வீர்காள்!நாமும் நம் பாவைக்கு(ச்)
செய்யும் கிரிசைகள் கேளீரோ,பார்கடலுள்
பைய(த்) துயின்ற பரமனடி பாடி
நெய்யுன்னோம் பாலுன்னோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை(ச்) சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனயும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுரம்-3
.ஓங்கி உலகளந்த! உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு(ச்) சாற்றி நீரடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கும் பெரும் சென் நெல் ஊடு கயலுகள(ப்)
பூங்குவளை(ப்) போதில் பொரிவண்டு கண்படுப்ப(த்)
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வல்லல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

பாசுரம்-4.ஆழி மழை(க்)கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து(ப்)
பாழிய் அம் தோலுடை(ப்) பத்மனாபன் கையில்
ஆழி போல் மின்னி,வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்கலும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-5
.மாயனை மன்னுவட மதுரை மைந்தனை(த்)
தூயப் பெருனீர் யமுனை(த்) துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை(த்)
தாயை(க்) குடல் விலக்கஞ் செய்த தாமோதரனை(த்)
தூயமாய் வந்து நாம் தூமலர் தூவி(த்) தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க(ப்)
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பாசுரம்-6.புள்ளும் சிலம்பின காண் புல்லரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்!பேய் முலை நஞ்சுண்டு
கள்ள(ச்) சகடம் கலக் கழிய(க்) காலோச்சி
வெல்லத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்து(க்) கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து அரி யென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பாசுரம்-7.கீசு கீசென்று ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலயோ ? பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்!திற ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-8.கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவை எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-9.தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயில் அனை மேல் கண் வளரும்
மாமான் மகளே!மணிக்கதவம் தாழ்திறவாய்!
மாமீர் ! அவளை எழுப்பீரோ?உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-10.நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணண் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் முனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திர ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-11.கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

பாசுரம்-12.
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!

பாசுரம்-13.
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!

பாசுரம்-14.
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!

பாசுரம்-15.

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!

பாசுரம்-16.

நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

பாசுரம்-17.

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-18.

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-19.

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-20.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!
செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!
உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

பாசுரம்-21.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-22.
அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-23.
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-24.
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்

பாசுரம்-25.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-26.
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,
சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-27.
கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு(*)
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-28.
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


பாசுரம்-29.

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-30.
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆசார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே நாராயணாய நம:
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து:
Get this widget | Track details | eSnips Social DNA


இந்த பாராயணத்தை wav வடிவில்
தரவிறக்க
இங்கே சொடுக்கவும்.
http://www.ziddu.com/download/5765696/thirupavai.wav.html

4 கருத்துகள்:

  1. படித்தேன் ... விளக்கம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக தருகிறேன்
    இதுவே புத்தகத்திலிருந்து டைப் செய்தது தான்
    மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு பாராயணம்
    உங்களுக்கு நூறு சதம் மன நிம்மதி ,அமைதி,செல்வம் சேர்க்கும் ஒரு அற்புத பாசுரம்
    கண்டிப்பாக விளக்கத்தையும் விரைவில் வெளியிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வலைப்பதிவுக்கு நான் அடிக்கடி வருபவன் . இன்றுதான் இந்த வலைப்பதிவுக்கு வந்திருக்கிறேன். நல்ல பல விடயங்கள். உங்களுக்கு பல தடவை நன்றி சொல்கிறேன். தொடருங்கள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. நண்பர் சந்ரு
    தொடர்ந்த ஆதரவுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு உண்மையாக இருக்க முயற்சிக்கிறேன்.
    இப்போது wav வடிவில் பாடலை சேர்த்துள்ளேன்.
    அதையும் கேட்டால் மகிழ்வேன்.

    பதிலளிநீக்கு

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin